ஒரு ஆசிரமத்தில் குரு, தன் சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு ஒரு மலர் தோட்டத்தைக் காண்பித்து, அதனுள் சென்று அங்கு இருக்கும் மலர்களிலே மிகச் சிறந்த ஒரே ஒரு மலரைப் பறித்து வர வேண்டும். போன வழியில் திரும்பக் கூடாது. என்று கூறினார். முதல் சீடன் மலர் தோட்டத்திலே நுழைந்து சற்று நேரம் கழித்து ஒரு மலரைப் பறித்துக் கொண்டு வந்தான். பின் அடுத்தவன் சென்று ஒரு மலரைப் பறித்துக் கொண்டு வந்தான். குரு முதலாமவனைப் பார்த்து, “ நீ பறித்ததுதான் அங்கிருந்தவைகளிலேயே சிறந்த மலரா?” என்று வினவினார். அவன், “இல்லை குருவே, நான் மலர் தோட்டத்தில் நுழைந்தவுடன் இந்த மலரைப் பார்த்தேன். இதுவே சிறந்த மலராகத் தோன்றியது. பறித்துக்கொண்டேன். ஆனால் மேலும் செல்லச் செல்ல இன்னும் சிறந்த மலர்கள் இருந்தன.” என்று கூறினான். அடுத்தவனிடமும் குரு அதே கேள்வியைக் கேட்டார். அவன், “இல்லை குருவே, நான் மலர் தோட்டத்தில் நுழைந்ததுமுதல் பல சிறந்த மலர்களைப் பார்த்தேன், இன்னும் சிறந்த மலர் இருக்கலாம் என்று எண்ணி கடைசிவரை சென்றுவிட்டேன், திரும்பி வரக் கூடாது என்பதால் கடைசியில் இருந்த இந்த மலரை பறிக்க நேர்ந்தது.” என்று கூறினான்.
குரு, “நீங்கள் இருவருமே சரியானதைச் செய்ய வில்லை, அவசரப்பட்டு முதலில் கிடைப்பதை ஏற்பதுவும், காலந்தாழ்த்தி சரியானவைகளைப் பெறாமல் விடுவதுவும் தவறானவையே, நீங்கள் இருவருமே தவறிழைத்தீர்கள்.” என்று கூறி இருவரையுமே விரட்டி அடித்தார்





0 comments:
Post a Comment