ஒரு ஆசிரமத்தில் குரு, தன்  சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு ஒரு மலர் தோட்டத்தைக் காண்பித்து, அதனுள் சென்று அங்கு இருக்கும் மலர்களிலே மிகச் சிறந்த ஒரே ஒரு மலரைப் பறித்து வர வேண்டும். போன வழியில் திரும்பக் கூடாது. என்று கூறினார். முதல் சீடன் மலர் தோட்டத்திலே நுழைந்து சற்று நேரம் கழித்து ஒரு மலரைப் பறித்துக் கொண்டு வந்தான். பின் அடுத்தவன் சென்று ஒரு மலரைப் பறித்துக் கொண்டு வந்தான். குரு முதலாமவனைப் பார்த்து, “ நீ பறித்ததுதான் அங்கிருந்தவைகளிலேயே சிறந்த மலரா?” என்று வினவினார். அவன், “இல்லை குருவே, நான் மலர் தோட்டத்தில் நுழைந்தவுடன் இந்த மலரைப் பார்த்தேன். இதுவே சிறந்த மலராகத் தோன்றியது. பறித்துக்கொண்டேன். ஆனால் மேலும் செல்லச் செல்ல இன்னும் சிறந்த மலர்கள் இருந்தன.” என்று கூறினான். அடுத்தவனிடமும் குரு அதே கேள்வியைக் கேட்டார். அவன், “இல்லை குருவே, நான் மலர் தோட்டத்தில் நுழைந்ததுமுதல் பல சிறந்த மலர்களைப் பார்த்தேன், இன்னும் சிறந்த மலர் இருக்கலாம் என்று எண்ணி கடைசிவரை சென்றுவிட்டேன், திரும்பி வரக் கூடாது என்பதால் கடைசியில் இருந்த இந்த மலரை பறிக்க நேர்ந்தது.” என்று கூறினான்.
குரு, “நீங்கள் இருவருமே சரியானதைச் செய்ய வில்லை, அவசரப்பட்டு முதலில் கிடைப்பதை ஏற்பதுவும், காலந்தாழ்த்தி சரியானவைகளைப் பெறாமல் விடுவதுவும் தவறானவையே, நீங்கள் இருவருமே தவறிழைத்தீர்கள்.” என்று கூறி இருவரையுமே  விரட்டி அடித்தார்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Team Sprit???


ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் ஒரு வித்தியாசமான காட்சியைக் கண்டார். ஒருவர் சாலை ஓரத்தில் குழி தோண்டிக்கொண்டு சென்றார். மற்றொருவர் அதை மூடிக் கொண்டே சென்றார்.

இவருக்கு மிகுந்த ஆச்சரியம். அவர்களிடம் சென்று
நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? என்று வினவினார். அவர்கள், நாங்கள் மூன்று பேர் ஒரு வேலையைச் செய்ய வேண்டும். ஒருவர் குழி வெட்ட வேண்டும், ஒருவர் மரக்கன்றை நட வேண்டும், மூன்றாமவர் குழியை மூட வேண்டும், இன்று மரம் நடுபவர் விடுப்பில் சென்று விட்டார். நாங்கள் எங்கள் வேலையை விடாமல் செய்கிறோம் என்றனர்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குருகுலமும் பூனையும் !!


ஒரு குருகுலம். குரு மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தார். ஒரு பூனை அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தது. மாணவர்கள் பாடத்தைக்  கவனிப்பதை விட்டுவிட்டு பூனையைக் கவனிக்க ஆரம்பித்தனர். இதைக் கவனித்த குரு பூனையைப் பிடித்து அருகில் இருந்த மரத்தில் கட்டச் சொன்னார். மறுநாளில் இருந்து பாடம் ஆரம்பிப்பதற்கு முன்பே பூனையைப் பிடித்து மரத்தில் கட்ட ஆரம்பித்தனர். ஒருநாள் குரு இறந்து போனார். அடுத்த குரு பொறுப்பேற்றுக்கொண்டார்.பாடம் நடத்த வந்து அமர்ந்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். கோபத்தில் அவர் முகம் சிவந்தது. யாரங்கே? பாடம் நடத்த ஆரம்பிப்பதற்கு முன் ஒரு பூனையை மரத்தில் கட்ட வேண்டும் என்று தெரியாதா? என்று கேட்டார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நூறாவது ஜோக் !!!

                                                   ஒருமுறை ஒரு பந்தயம் நடைபெற்றது. அதில் நூறு 
ஜோக்குகள் சொல்லப்படும். நூறு ஜோக்குகள் வரை யார் சிரிக்காமல் 
இருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

                                                    போட்டி ஆரம்பித்தது. நிறைய பேர் கலந்து 
கொண்டனர்.ஜோக்குகள் சொல்ல ஆரம்பித்தனர். முதல் ஜோக் 
சொல்லியவுடன் சிலர் சிரித்து விட்டனர். போட்டி தொடர்ந்து நடைபெற்றது. 
படிப்படியாக சிரித்தவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் 
சிரிக்கவே இல்லை. எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியம். அனைவரும் 
அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். தொண்ணூற்று ஒன்பதாவது ஜோக்கும் 
சொல்லப்பட்டது. இப்பொழுதும் அவர் சிரிக்கவே இல்லை. எல்லோரும் அவர் 
நிச்சயம் ஜெயித்து விடுவார் என்று பேசிக்கொண்டிருந்தனர். 

                                                  நூறாவது ஜோக் சொல்லவேண்டும். ஜோக் சொல்பவர்  
நூறாவது ஜோக் சொல்ல வை திறந்தார். இப்பொழுது கடகட வென சிரிக்கும் 
சத்தம் கேட்டது. அந்த சிரிக்காத  நபர்தான் சிரித்துக் கொண்டிருந்தார்.

                                                 எல்லோருக்கும் ஆச்சரியம். அவரிடம் போய் "ஏன்  
இபொழுது சிரித்தீர்கள்? இன்னும் ஒரு ஜோக் தானே சிரிக்காமல் 
இருந்திருக்கலாமே?" என்று கேட்டனர்.

                                                 அவர் " முதன் முதலில் சொன்னார்களே அந்த ஜோக் 
இப்பொழுதுதான் புரிந்தது! வெரி நைஸ் !" என்று சொல்லிவிட்டு விழுந்து 
விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்!!


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இப்படியும் யோசிக்கலாமோ?

                                                              ஒருமுறை அமெரிக்க அதிபரும், ரஷ்ய அதிபரும் 


ரஷ்யாவில் கோல்ப் விளையாடினார்கள். இருவர் மட்டுமே விளையாடிய அந்த 


போட்டியில் அமெரிக்க அதிபர் வெற்றி பெற்றார். இதை மறுநாள் செய்தியாக 


வெளியிட்ட ரஷ்ய பத்திரிக்கைகள் இப்படி வெளியிட்டன.




                                                 நேற்று நடந்த கோல்ப் பந்தயத்தில் 
                                     நமது அதிபர் இரண்டாவதாக வந்தார்.
                         அமெரிக்க அதிபர் கடைசி நபருக்கு முந்தியவராக வந்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிந்தனைக்குச் சில துளிகள் !!!

சிந்திக்காமல் படிப்பது வீணானது -
படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது!




அநீதியான சமாதானத்தை விட
நியாயமான போரே மேல்...!




சரியானதெல்லாம் பிரபலமாவதில்லை-
பிரபலமானதெல்லாம் சரியானதில்லை!




உழுது பிழைப்பவன் ஒரு கோடி-
ஏய்ச்சு பிழைப்பவன் பல கோடி!


முயற்சிகள் தவறாகலாம் -
முயற்சிக்க தவறக்கூடாது!


உன்னை யாராவது ஒரு தடவை ஏமாற்றினால் அது அவன் தவறு-
இரண்டாவது முறையும் ஏமாற்றினால் அது உன் தவறு!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இலவச திட்டங்களால் நன்மையா? தீமையா?



                   இப்பொழுது ஆளும் அரசால்  இலவச திட்டங்கள் வாரி வாரி இறைக்கப்படுகின்றன. மக்களுக்கு அவை பயனை அளிக்கின்றனவா? இல்லையா? என்று அவர்கள் ஆராய்ந்து பார்ப்பதில்லை.
                   
                   மதிய உணவுத்திட்டத்திலிருந்து இலவச வண்ணத்தொலைக்காட்சி வரை ஏராளமான இலவச திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
                    
                  நியாயவிலைக்கடைகளில் இருந்து நாம் ஆரம்பிப்போம். அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, மைதா, ரவை, பாமாயில் இன்னும் பல பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்படுகின்றன. நம் அனைவருக்கும் தெரிந்த பொதுவான செய்தி, நியாய விலைக்கடைகளில் வழங்கப் படும் பொருட்களின்  எடை/அளவு குறைவாகவே கிடைக்கும். அரிசி முதலானவை நெடி அளிப்பதாகவும், தரம் குறைந்ததாகவும் இருக்கும்.
               
                ஆனால் அதே நியாய விலைக் கடைகளில் இருந்து மூடை மூடையாக நல்ல, தரமான, எடை குறையாத பொருட்கள் கள்ள சந்தைகளுக்கு நியாயமான விலையில் வழங்கப்படும். அதை அவர்கள் கூடுதல் விலைக்கு விற்பார்கள்.
அதைத்தான்  நாம் வாங்கிப் பயன்படுத்துகிறோம்.


           ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்கப்படுகிறது. அதை வாங்கி ரூ.7/- அல்லது ரூ.8/-க்கு கடைகளில் விற்பவர்களே அதிகம். அதை அவர்கள் ரூ.10/- முதல் ரூ.15/- வரை அரிசியின் தரத்தைக் கொண்டு விற்கிறார்கள். அதை மக்கள் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.  மண்ணெண்ணையும் இதே போலத்தான் ரூ12/-க்கு வாங்கி ரூ.25/- முதல் ரூ.30/- வரை விற்கப் படுகிறது. இப்படி விற்பனை செய்வதற்காகவே போலியான பெயர்களில், போலியான முகவரிகளில் ரேஷன் கார்டுகள் வாங்கப் படுகின்றன.
                சர்க்கரை நல்லதாக வரும் பட்சத்தில் சர்க்கரை இருப்பில் இல்லை என்று தெரிவித்து விட்டு, அவற்றை கள்ள சந்தையில் தள்ளி விடுகிறார்கள். பருப்பு, எண்ணெய் போன்றவற்றின் கதையும் இதுதான்.
               ஒரு கிலோ சர்க்கரை வாங்கினால் 800 கிராம் அல்லது 900 கிராம் மட்டுமே கிடைக்கும்.

    
                   இலவச வண்ணத்தொலைக்காட்சி கொடுத்ததன் நோக்கம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி இருந்தால் யாருக்கும் பசி, வறுமை இருக்காது என்று நினைத்திருக்கலாம்.
                     இந்த வண்ணத்தொலைக்காட்சிகளை வாங்கி மூலையில் பெட்டியோடு வைத்திருப்பவர்களே மிக அதிகம். கிடைத்த விலைக்கு விற்றவர்கள் மீதி உள்ளவர்கள். தொடக்கத்தில் ரூ.1500/- விற்பனை செய்யப்பட இலவச தொலைக்காட்சி நாளடைவில் ரூ.500/-க்கும் ரூ.400/-க்கும் விற்கப் பட்டது. பல வீடுகளில் நான்கு, ஐந்து தொலைக்காட்சிகள் கூட இருக்கின்றன. இதனால் யாருக்கு என்ன பயன்? மின்சாரம் கூட இல்லாத வீடுகளில் தொலைக்காட்சி இருந்து என்ன பயன்?

                     பள்ளிகளில் உணவுக்காக வழங்கப்படும் அரிசி, பருப்பு, முட்டை போன்றவைகளும் கள்ள சந்தைக்கு வழங்கப் படுகின்றன. 90%  பள்ளிகளில் தரமான உணவு வழங்கப்படாத காரணத்தினால், பிள்ளைகள் பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடுவதில்லை. ஆனால் அவர்களுக்கு சமைத்ததாக கணக்கு காட்டப்பட்டு அந்த பொருட்கள் கள்ள சந்தைக்கு விற்கப் படுகின்றன. 
                     அரசாங்க பொது மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இலவசமாகவே மருத்துவம் செய்யப் படுகிறது. பல மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இருப்பதில்லை. கிராமப்புற மருத்துவமனைகளில் மருத்துவர்களே இருப்பதில்லை. மேலும் இந்த மருத்துவ மனைகளில் நிலவும் சுகாதாரமற்ற தன்மை, இங்கு பணிபுரிபவர்களின் அலட்சியமான கவனிப்பு, அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப் படுதல், தாமதப் படுத்தப் பட்ட மருத்துவம், காலாவதியான அல்லது பற்றாக்குறையான மருந்துகள் இப்படிப் பல காரணங்களால் இங்கே மருத்துவம் பெற பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.     இவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு மருத்துவம் பார்க்கச் செல்வோருக்கு, பல நாட்கள் இழுத்தடிக்கப்பட்டுப் பின் அரைகுறையாக மருத்துவம் பார்க்கப் படுகிறது. மருதுவனைகளில் வேலை பார்ப்பவர்களை கவனித்தால் நமக்கு உரிய மருத்துவம் கிடைக்கும். அல்லது யாருடைய சிபாரிசாவது  கிடைத்தால் ராஜவைத்தியம் பார்க்கப்படும்.  எல்லோருக்கும் சிபாரிசு கிடைக்குமா?
               இங்கே மருத்துவம் பெற விரும்பாமல் கடனை வாங்கியாவது தனியார் மருத்துவ மனைகளில் எவ்வளவு பணம் கொடுத்தேனும்  மருத்துவம் பெறுவோரே அதிகம்.


                சுகாதார துறையில் வேலை பார்ப்பவர்களே இங்கு மருத்துவம் பார்த்துக்கொள்வதில்லை. எந்த அதிகாரியும், சட்ட மன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஏன் நமது முதல்வரே கூட  அரசு மருத்துவமனைக்கு மருத்துவம் பார்த்துக் கொள்ள  வருவதில்லை. மக்களின் வரிப்பணத்தில் தனியார் மருத்துவமனைகளில் ராஜவைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள்.


               இப்படி இலவசமாக வழங்கப்படும் அனைத்து விஷயங்களிலும் ஏதேனும் ஒருவிதத்தில் சேவைக்குறைபாடோ அல்லது சரியான படியோ நமக்கு அந்த சேவை கிடைப்பதில்லை.
இதை நாம் வழக்கமான, பழக்கமான ஒன்றாக கருதத் தொடங்கிவிட்டோம்.

               இவற்றை பற்றி நாம் புகார் தெரிவித்தாலோ அல்லது தட்டிக் கேட்டாலோ நமக்கு கிடைக்கும் பதில் இலவசமாக/குறைந்தவிலையில் கிடைத்தால் அப்படிதான் இருக்கும். கொடுப்பதை வாங்கிக் கொண்டு போங்கள் என்பதுதான். மக்களும் இதை ஒரு உரிமையாக கோர முடியவில்லை.

இலவசங்கள் வழங்கப்படுவது மக்களின் வரிப்பணத்தில். அவர்களின் நோக்கம் வேண்டுமானால் மக்களுக்கு  பயன்பட வேண்டும் என்பதாக இருக்கலாம். ஆனால் இந்த திட்டங்கள் மக்களுக்கு பயன் தருவதை விட  பதுக்கல், மோசடி, ஊழல், கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களை மறைமுகமாக ஊக்குவிப்பதாகவே இருக்கிறது.

அரசின் இத்தகைய இலவச திட்டங்களால் ஏற்படும் பயன்களை விட தீமைகளே அதிகம்

தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் பேருந்துகள் போன்றவற்றில் கட்டணமாக பெறப்படும் தொகை அரசாங்கம் நிர்ணயிக்கும் கட்டணங்களை விட மிக மிக அதிகம்.


அரசுப் பள்ளிகளில் கட்டணம் கிடையாது. ஆனால் அங்கே தரமான கட்டிடங்கள், போதுமான அடிப்படை வசதிகள், தரமான கல்வி தரப்படவில்லை.

தனியார் மருத்துவமனைகளில், பள்ளிகளில்  வாங்கப்படும் கட்டணங்களுக்கு  முறையான கணக்கு காட்டப்பட்டு முறையான வரி கட்டப்படுகிறதா?


அரசு நிர்ணயித்த கட்டணங்களைத்தான்  தனியார் கல்வி நிறுவனங்கள் வாங்குகின்றனவா?

இந்தக் கேள்விகளுக்குப்  பதில் இல்லை என்பதுதான்.

பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள் வாய்க்கு வந்த கட்டணங்களை நிர்ணயித்து மிக அதிகமாக வாங்குகின்றனர்.

மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான கல்வியும், மருத்துவமும் இன்றைக்கு மிக அதிகமான லாபத்தை ஈட்டித் தரும் தொழில்கள் ஆகி விட்டன. காய்கறிகள் உட்பட உணவுப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது.
.


இன்னும் இலவசங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற வேண்டாம்.

இதற்குப் பதிலாக அரசே இலவசமாக/விலை குறைவாக விற்பதற்குப் பதிலாக நியாயமான விலையிலேயே நியாய விலைக் கடைகளில் விற்கலாம். பதுக்கல், மோசடி, கள்ளசந்தைக்குக்  கடத்தல் போன்றவைகளைத் தடுக்கலாம். வெளி மார்க்கெட்டை விட சற்றே குறைவாக, சரியான எடையில் பாக்கெட்டுகளாக  விற்பதன் மூலம் மக்கள் உண்மையிலேயே பயன்பெறும் வகையில் விற்பனை செய்யலாம்.

குறைவான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தரமான மருத்துவம் தரலாம். இலவசமாகப் பெறாமல் கட்டணம் கொடுப்பதால் மக்களே தரமான சேவையை உரிமையாக கேட்டுப் பெறமுடியும்.

அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

நல்ல வசதிகளுடன் கூடிய தரமான கல்வியை சரியான கட்டணத்தில் அரசுப் பள்ளிகளில் அளித்தால் தனியார் பள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

சரியான கட்டமைப்புடன், முறையான வசதிகளுடன் நியாயமான கட்டணம் நிர்ணயித்து தரமான சேவை வழங்கும் பட்சத்தில் மக்கள் இலவசமாக கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லும் காலம் வந்து விடும்.
          
            மக்களுக்கு இலவச சேலை வேட்டி வேண்டாம் அவர்கள் வளம் பெற வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள்.


           மக்களுக்கு இலவச புழுத்த அரிசி வேண்டாம். நியாயமான விலையில் நல்ல புழுங்கல் அரிசி கொடுங்கள்.   
          
        
    இலவசங்கள் சிலர் மட்டும் பயன் பெரும் வகையில் இருப்பதால் அவற்றை நிறுத்தி விட்டு பலரும் பயன் பெரும் வகையில் திட்டங்களை தீட்ட வேண்டும்.





எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் !!!
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் !!!
     

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மன்னராட்சியா? மக்களாட்சியா?



            இப்பொழுது நடப்பது மக்கள் ஆட்சி. மக்களால் தேர்தெடுக்கப்படும் நபர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்து மக்கள் நலனுக்காக பாடு படுவார்கள். மக்கள் நினைத்தால் அவர்களை தூக்கி எறியலாம். தவறுகள் நடந்தால் தட்டிக் கேட்கலாம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கட்டப்படுகின்றன. ஆனால் நடப்பவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது நடப்பது மன்னராட்சி தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது

மன்னர் ஆட்சியில் சர்வ அதிகாரம் படைத்த சக்கரவர்த்தி இருப்பார். அவருக்கு கீழே பல குறுநில மன்னர்கள் இருப்பார்கள். சக்கரவர்த்தியின் திட்டங்களை அனைத்து பகுதிகளிலும் நிறைவேற்றுவது அவர்களின் கடமை. சில சமயங்களில் குறுநில மன்னர்கள் அதிக அதிகாரம் படைத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் சக்கரவர்த்தியையே ஆட்டி வைக்கும் சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் குறுநில மன்னர்கள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து அவர்களில் ஒருவரை சக்கரவர்த்தியாக்குவதும் உண்டு. பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு இந்த சம்பவங்கள் மிகப் பரிச்சயமானவை.
இப்பொழுதும் பிரதமர் சர்வ அதிகாரம் படைத்தவர். குறுநில மன்னர்களாய் மாநில முதல்வர்கள். அப்பொழுதும், இப்பொழுதும் வாரிசுகள் பதவிக்கு வருவது தவறாமல் நடக்கிறது.

மன்னர்கள் வீதிக்கு வரும்பொழுது மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. இப்பொழுதும் அப்படியே.
மன்னர்களை விமர்சித்த கவியரசர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் விமர்சித்தாலும் அதை செவிமடுத்த அரசர்கள் மிகக் குறைவு. கவிஞர்களுக்கு தண்டனை கொடுத்தவர்களே அதிகம். இப்பொழுதும் தேவைகளை சுட்டிக்காட்டும் பத்திரிக்கையாளர்கள் இருக்கின்றனர். அவர்களும் தண்டனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள் அல்லது தாக்கப் படுகிறார்கள்.
சில சமயங்களில் சக்கரவர்த்தியையோ அல்லது குறுநில மன்னர்களையோ ஆட்டி வைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் அவர்கள் அருகிலேயே இருப்பார்கள். அவர்களை மீறி மன்னர்களால் கூட எந்த விதமான முடிவும் எடுக்க முடியாது.
 இப்பொழுது உள்ள நிலைமையைப் பற்றி கூறவேண்டியது இல்லை.
மக்கள் கொல்லப்பட்டாலும் மன்னர்கள் உயிரோடு இருப்பது அவசியம் எனக் கருதப்பட்டது. இப்பொழுதும் பொது மக்களின் உயிரை விட பதவியில் இருப்பவர்களுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் வழங்கப் படுகிறது. அவர்களை காப்பாற்ற நினைத்து அப்பாவி பொதுமக்களை தண்டிப்பதும் நடந்து வருகிறது.
மன்னாட்சியில் பிற நாடுகளின்  மீது படையெடுத்து கொள்ளை அடித்த சம்பவங்கள் உண்டு. மாறாக இப்பொழுது சொந்த நாட்டு மக்களையே வஞ்சித்து, அவர்கள் உழைப்பில் வரும் வருமானத்தை வரியாக வசூலித்து அதை பல கணக்குகள் காட்டியும், காட்டாமலும் கொள்ளை அடித்து வரும் சம்பவங்கள் நடை பெறுகின்றன.
ஒரு மன்னர் போரில் தோற்று இன்னொரு மன்னர் வருகையில் பழைய மன்னரை சிறையில் தள்ளுவது வழக்கம்.
ஒரு ஆட்சி மாறி இன்னொரு ஆட்சி வரும்பொழுது குற்றங்கள் சுமத்தி சில நாட்களாவது சிறையில் தள்ளும் வழக்கம் இப்பொழுதும் உண்டு.
மன்னராட்சியில் கூட இல்லாத சில சர்வாதிகார நடவடிக்கைகள், கொடுங்கோல் ஆட்சிகள் இப்பொழுது நடைபெறுவதுண்டு.
மக்களாட்சியின் மிக முக்கியமான அம்சமாக கருதப்பட்டது சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் உண்மையில் சட்டம் இல்லாதவர்களுக்கு ஒருமாதிரியாகவும், பணம் படைத்தவர்கள், பதவியில் இருப்பவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒருமாதிரியாகவும் இருக்கிறது என்பதே உண்மை. பதவியில் இருப்பவர்கள் கோடி, கோடியாக ஊழல் செய்தாலும் பதவியை ராஜினாமா செய்தால் மட்டும் போதும். அவர்கள் செய்ததை நியாயப்படுத்த புதிய சட்டங்களைக் கூட இயற்றுவார்கள்.
இந்தியாவில் இதுவரை எத்தனையோ ஊழல் வழக்குகள் நடைபெற்றுள்ளன, எந்த வழக்கிலும் பதவியில் இருந்த, அதிகாரம் படைத்தவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்கள் ஊழல் செய்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஒரு செய்தி கூட இல்லை.
சாதாரண மனிதர்கள் 50 ம் 500 ம் லஞ்சமாக வாங்கினால், உடனடி தண்டனை, வேலை பறிப்பு, சிறைவாசம்.
கோடிகளில் கொள்ளை அடித்தால் ஏ.சி காரில் அழைத்துச் சென்று, விசாரணை செய்து ஏ.சி சிறையில் அடித்துப் பின் ஜாமீனில் விட்டு விடுவார்கள். வழக்கு கொஞ்சநாட்கள் நடைபெறும். பின் மக்கள் மறந்து விடுவார்கள் அவர்களும் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்.
மந்திரி என்பவர் மக்கள் பிரதிநிதி. மக்களுக்கு தொண்டு செய்யவே அவர்கள் பதவியில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காய்
மன்னர்களை சந்திப்பதே தெய்வத்தை தரிசித்தது போல இருந்து வந்தது.
. இப்பொழுதும் மந்திரியை சந்திப்பது கடவுளை சந்திப்பது போலத்தான் . நடுவில் ஏகப்பட்ட பூசாரிகளும் உண்டு. இதையெல்லாம் மீறி மந்திரியை சந்தித்து விட்டாலே வாழ்வின் அடைய முடியாத லட்சியத்தை அடைந்து விட்டது போலத்தான். பின் நமது காரியங்களை அடைய நாம் நிறைய விலை கொடுக்க வேண்டும்.
இப்பொழுது வார்டு கவுன்சிலர்கள் கூட மந்திரியை விட அதிகாரம் படைத்தவர்களாக இருப்பது போல நடந்து கொள்கிறார்கள்.

ஒரே ஒரு வித்தியாசம் தான். இப்போது உள்ள மன்னர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கண்டிப்பாக தேர்தல் என்ற ஒன்றை சந்திக்க வேண்டி உள்ளது. ஆரம்ப காலங்களில் மக்கள் நலனுக்கு பாடுபட்டவர்களை மக்கள் தேர்தெடுத்து வந்தனர். சுயநலமில்லாத எத்தனையோ தலைவர்கள் பெரும் பதவிகளை அமர்ந்து எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மக்கள் நலனை விரும்பி பதவியின் தன்மையை உணர்ந்து பல திட்டங்களை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தனர்.
எப்பொழுது இந்த பதவிகள் சர்வ அதிகாரம் படித்தவை, அவற்றின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று அரசியல்வாதிகள் தெரிந்து கொண்டார்களோ அப்பொழுது ஆரம்பித்தது மன்னராட்சி.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், எதற்கு, யாருக்குச் சேர்க்கிறோம் என்று தெரியாமலேயே மலை போல பணத்தை சேர்க்கவும் தங்கள் பதவியை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து, தொண்டர்களுக்குப் பதில் குண்டர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, முறைகேடு, மோசடி  போன்றவை இட்லி, தோசை, பூரி போல அன்றாட வாழ்க்கையில் வழக்கமான, பழக்கமான விசயங்கள் ஆகி விட்டன.
விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கே ஓட்டு போடவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டு விட்டது.
ஓட்டு போட விருப்பம் இல்லாமல் வீட்டுக்குள் முடங்கி கிடப்பவர்களே அதிகம். அவர்களின் ஓட்டுகளும் வேறு நபர்களால் போடப்பட்டு விடும்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பது, மிரட்டி ஓட்டு போட வைப்பது, அவர்களுடைய தேவைகளை வைத்து பணிய வைப்பது என்று `பல வகைகளிலும் பலவந்தமாக ஓட்டு பெறப்படுகிறது.
ஆக நாம் அளிக்கும் ஓட்டுக்கும் உரிய மரியாதை இல்லை.
இவைகளில் இருந்து நமக்கு எப்பொழுது விடுதலை?
சுயநலமில்லாத, நாட்டின் முன்னேற்றத்தில் மட்டுமே அக்கறை காட்டும் தலைவர்கள் வழி நடத்த, இளைஞர்கள் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக நமது அப்துல் கலாம் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் அமர்ந்து விட்டார். அவர் போன்ற தன்னலமில்லாத தலைவர்கள் வழி நடத்திட வேண்டும்.
அப்பொழுதுதான் நம்மிடம் உழைப்பை சுரண்டி, நமது வருமானத்தையும் வரியாகப் பெற்று, அதில் சொகுசு வாழ்க்கை வாழும் இந்த மன்னர்களின் ஆட்சியில் இருந்து நாம் விடுதலை அடைய முடியும்.
           கனவு காணுவோம், மக்கள் ஆட்சி அமைய.!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS